உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ மாவட்ட சிறையில் புதிதாக 36 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் லக்னோ மாவட்ட சிறையில் கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 27 பேருக்கு எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டது. அப்போது, எச்.ஐ.வி பரிசோதனை கருவிகள் பற்றாக்குறையால், டிசம்பர் மாதம் மீண்டும் கைதிகளுக்கு எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 36 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் லக்னோ மாவட்ட சிறையில் 63 பேருக்கு எச்.ஐ.வி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும், சிறைக்குள் வந்த பிறகு எந்தவொரு கைதிக்கும் எச்.ஐ.வி தொற்று ஏற்படவில்லை என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.